Pages

Monday 30 May 2016

தமிழுக்குள் பிற எழுத்தேன், தனித்தன்மை நிலைத்திடுமா?








தமிழுக்குள் பிற எழுத்தேன், தனித்தன்மை நிலைத்திடுமா?
                         புதுக்கவிதை
                    மதுரை கங்காதரன்

                     தமிழ்தாய் வாழ்த்து

ஒலியாய் பிறந்து எழுத்தாய் தவழ்ந்து தமிழாய் வளர்ந்து
தமிழனுக்கு அடையாளமாய்த் திகழுவது தமிழ்மொழி

செழிப்பு மிக்க செந்தமிழ்மொழிக்கு 
செம்மொழி சிறப்பு கொடுத்த தமிழ்தாயே

இந்த மாமதுரை கவிஞர் பேரவையில் தான்
இனிய தனித்தமிழ் என் செவியில் பாய்கிறது

என் உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்கிறது
ஏன் இது தமிழர்களுக்குப் புரியவில்லை

தமிழ்தாயே, அவர்களிடத்தில் தூது செல்
தனித்தமிழே பேசு என்று சொல்வாயாக! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

தமிழுக்குள் பிற எழுத்தேன்தனித்தன்மை நிலைத்திடுமா?
          புதுக்கவிதை

அன்று சிகரமாய் உயரத்தில் பறந்த தமிழ்
இன்று தகரமாய் தரையில் தவழும் நிலைமை

நீரில் மிதக்கும் நீர் குமிழிகள்
நீண்ட ஆயுளுடன் இருக்குமா?

தமிழில்  பிற எழுத்துகள் கலந்தால்
தமிழ்மொழியின் ஆயுள் நீளுமா?

இயல்பாய் நடக்க இரு கால்கள் இருக்க
ஒரு கால் வெட்டி கட்டைக் கால் பொருத்தலாமா?

இனிமையாய் பேச சொந்த தமிழ்மொழி இருக்க
இரவலாய் பிறமொழி கலந்து பேசலாமா?

தனித்தமிழ் பேசுவதோ சொர்க்கத்தில் மிதப்பது போல
பிறமொழி கலந்து பேசுவதோ நரகத்தில் வாழ்வது போல

தனித்தமிழ் பேசினால் உன் தரம் தாழ்ந்துவிடுமா?
தமிழென்ன தலையாட்டும் பொம்மையா?

இந்நாளில் தனித்தமிழ் பேசாத தமிழா, விழித்துக் கொள்
பின்னாளில் மானமிழப்பாய் மதிகெட்டுப் போவாய்

தரணியாளும் தகுதி கொண்ட தமிழ்மொழியை
தரம் தாழ்த்தும் பிறமொழிக் கலப்பு சரியா?

தமிழா, தமிழ்மொழி அழியாமல் காத்திட
தனித்தமிழில் இன்று முதலாவது பேசுவாயாக.

வாழ்க தமிழ் ! வளர்க தனித்தமிழ் ! வெல்க தமிழ்மொழி !

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++