Pages

Sunday 25 October 2015

தமிழ் எழுத்துள் பிறஎழுத்தேன்?

                    


தமிழ் எழுத்துள் பிறஎழுத்தேன்?

25.10.15 அன்று மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவியரங்கத்தில் மதுரை கங்காதரன் இயம்பிய கவிதை

தமிழ்தாய் வாழ்த்து

சொந்த மொழி தமிழில்
சொக்க வைக்கும் தமிழ் சொற்களால்
தரணியெங்கும் தமிழ் புகழ் பரவ
தமிழ்தாயே எனக்கு அருள்புரிவாயே.

தமிழ் எழுத்துள் பிறஎழுத்தேன்?

வழிவழியாய் பிறமொழிகளுக்கு
வழிகாட்டியாய் நிற்கும் தமிழ்மொழி இன்று
வழி தவறி செல்வதை நம்
விழி கொண்டு பார்க்க மறுப்பதேன்?

கண்ணினுள் தூசி நுழைந்தால் கண்ணீர் வரும்
கன்னித் தமிழினுள் பிறஎழுத்து கலந்தால் செந்நீர் வராதோ!
கலப்படப் பொருட்கள் உடலைக் கெடுக்கும்
கலப்பட எழுத்துகள் மொழியைக் கெடுக்குமன்றோ!

பேசுகின்ற நாவில் தனித்தமிழ் சொற்கள் இல்லை
விடுகின்ற மூச்சில் உயிர் தமிழ் இல்லை
உடுத்துகின்ற உடையில் தமிழின் பண்பு இல்லை
உண்ணுகின்ற உணவில் தமிழின் சுவை இல்லை

எழுதுகின்ற தமிழில் தனித்தமிழ் எழுத்துகள் இல்லை
பார்க்கின்ற ஊடகங்களில் செந்தமிழ் இல்லை
படிக்கின்ற பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை
கேட்கின்ற செவிகளில் தேன் தமிழ் இனிமை இல்லை

நடிப்பில் பிறஎழுத்துகள் அசலை மிஞ்சுகின்றன அதன்
நகாசு வேலையோ உண்மையை மறைக்கின்றன
பிஞ்சுத் தமிழில் பாடினால் தாலாட்டு பிறக்கும்
பிறமொழி கலந்தால் வெற்று வேட்டு மிஞ்சும்

கவிதைகளைப் பாடி தமிழை வளர்ப்போம்
கட்டுரைகளினால் தமிழை சிறப்பிப்போம்
ஊடகங்களில் தனித்தமிழை ஊக்குவிப்போம்
ஊக்கத்தோடு கணினித் தமிழை பரப்புவோம்.


            

No comments:

Post a Comment