Pages

Tuesday 1 January 2013

உள்விதி மனிதன் பாகம்: 39 நீ தான் பூமி, உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்? YOU THE EARTH, FIND WHO ARE AROUND YOU

உள்விதி மனிதன்
 

பாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்?




YOUR ARE THE EARTH, 
FIND WHO ARE ALL AROUND YOU!

சமமனிதக் கொள்கை



மதுரை கங்காதரன்



என் அன்புக்குரிய மனிதா! இந்த உள்விதி மனிதன் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். இன்றைய நிலவரப்படி உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி பேர். ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறு சிந்தனைகள். வேறு வேறு செயல்கள். வேறு வேறு குணங்கள். வேறு வேறு உருவங்கள். இப்படி  எல்லா விதத்திலும் மாறுபட்ட மனிதர்கள் நிரம்பி இருக்கிறார்கள். இதில் யார் யார் இது வரை என்ன செய்தார்கள்?இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நாளை என்ன செய்யப்போகிறார்கள்? எனபதை எளிதாக ஒருவர் கண்காணிக்க முடியுமா? என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அது முடியாத காரியமாகும். 



என் இனிய மனிதா! உனது கண்களுக்குத் தெரிவது கடல் நீரில் ஒரு சில துளி தான். மக்களுக்கு எது கண்ணுக்குத் தெரிகின்றதோ அவைகளைத் தான் கண்காணிக்க முடியும். அதுவே சில சமயங்களில் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகில் என்ன செய்கிறார்கள்? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது! ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் பெரும்பாலும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது சிந்தித்திக்கொண்டும், ஏதாவது செய்துகொண்டும் தான் இருப்பார்கள். அவர்கள் செய்வது  நல்லதா? தீயதா? என்று கூட தெரியவாய்ப்பில்லை! அவர்களின் செயல்கள் நன்மை தரும் நல்ல செயலாக இருந்தால் நீண்ட காலம் கழித்துத் தான் அவைகள் உலகுக்குத் தெரிகின்றன. அதுவும் ஒரு சில நல்லது மட்டுமே. ஆனால் தீயவை வெகுசீக்கிரத்தில் தெரிந்து விடுகின்றது. உலகத்தில் இப்போதுள்ள நிலைமை இது தான். இப்படி இருக்கும்போது கடவுளால் ஒவ்வொரு மனிதனையும் கண்காணிக்க இயலுமா? அதனால் இந்த உள்விதி  மனிதனை உயிராகப் படைத்து உனக்குள்புகுந்து இருக்கிறேன். 



பெருமையுள்ள மனிதா! பல நாடுகள் கொண்ட இந்த உலகில், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சட்டத்தைக் கொண்டு ஆண்டு வருகின்றார்கள். அதிலும் ஒரு சில நாடுகளில் சட்டம் கடுமையாகவும் நன்றாகவும் வேலை செய்கின்றது. சில  நாடுகளில் சட்டம் இருந்தும் அவைகள் செயலற்று இருக்கின்றது. நாட்டிற்குள்ளும் ஒரு சிலருக்கு நிறைந்த சலுகையும், உரிமையும் கிடைக்கின்றது. சிலருக்கு அதுவே மறுக்கப் படுகின்றது. தீவிரவாதம் சில நாடுகள் ஆதரிக்கின்றன. சில நாடுகள் தடுக்க முயற்சி செய்கின்றன. இப்படி இருக்கும்போது 'மக்கள் சட்டம்' அடிப்படையே உலகம் முழுவதும் சமமாக இல்லாதபோது இந்த உலகம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்று மார்தட்டிக் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கின்றதா?  



பிரியமுள்ள மனிதா! பலர் நான் எல்லோருக்குள்ளும் இந்த உள்விதி  மனிதன் இருப்பதை மறந்து  சிலர் தீய எண்ணங்களுடன், தீய செயல்களில் ஈடுபட்டு பலருக்கு அதிக துன்பத்தையும், கஷ்டத்தையும் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி மென்மேலும் பல தவறுகளை  தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்து வருகின்றனர். மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்று முன்னமே விளக்கியுள்ளேன். அதுபோல் நான் தான் அனைத்து ஜீவராசிகளின் உள்ளிருந்து அவர்களின் ஜீவ ஓட்டத்தை ஓட வைத்துக்கொண்டிருக்கின்றேன். அப்படியிருக்கும் போது நீ செய்யும் தவறுகள் எனக்குத் தெரியாமலா இருக்கும்?



சக்தியுள்ள மனிதா! உனது நிழல் போல் உன்னைப் பின்தொடர்ந்து வருவதை நீ எப்போதும் கவனிக்கத் தவறுகிறாய். அவ்வப்போது நான் உனக்கு கொடுக்கும் எச்சரிக்கைகளையும் நீ கேட்காமல் இருக்கின்றாய். உனது உயிராய் இருப்பவன் நான். என்னை மீறி செய்யும் எந்த ஒரு காரியமும் உனக்கும் உனது பரம்பரைக்கும் பெரிய கரையாய் இருக்கும் என்பதை உணர்ந்து கொள். மனிதா! நீ செய்யும் தவறுக்கு மற்றவர்கள் அதிக லாபம் பெறுவார்களே ஒழிய, ஒருபோதும் நீ செய்த தவறுகளை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனுநீதி படி யார் தீய செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்களே அதன் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.



ஆற்றல் கொண்ட மனிதா! இந்த உலகத்தில் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், பயங்கரவாதம், கொடுமைகள், அக்கிரமங்கள் போன்றவைகள் நடைபெற்று வருகின்றன. அதற்குக் காரணம் பேராசை, பதவி ஆசை, உலகை தன் கைக்குள் அடக்கி எல்லோரையும் அடிமைபடுத்த ஆசை. அதற்கு காரணம் நீ தான்.        

தன்னம்பிக்கை கொண்ட மனிதா! நான் திரும்ப திரும்ப கூறுவது என்னவென்றால்  நீ பிறக்கும்போது உனக்குத் தேவையான, உனது வாழ்க்கைக்கு உகந்த அனைத்து வசதிகளையும் கொடுத்தேன். ஆனால் உனது மூதாதையோர் அதை சரிவர காத்துக்கொள்ளாமல் இருந்ததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் நீ இப்போது பலவிதத்தில் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாய். நீ இழந்ததையும், உனது முன்னோர்கள் இழந்ததையும் மீட்டு உன்னிடத்தில் கொடுப்பதற்காகவே உள்விதி மனிதனாக உன்னிடம் இருக்கிறேன். அதற்குத் தேவையான திறமை, அறிவு, தன்னம்பிக்கை, துணிவு  கொடுத்து இனிமேலும் நீ ஏமாறாமல் இருக்க உனக்குத் தேவையான விழிப்புணர்வு கொடுத்து மேலும் உனது செல்வத்தை இழக்காதவாறு நான் பார்த்துக்கொள்ளவே உனக்குள் வந்திருக்கிறேன் .


    

 மென்மையான மனிதா! ஒருவன் திடீரென்று பல 'கோடிகளுக்கு அதிபதி'  ஆகிறான். இருக்கும் கோடீஸ்வரர்களோ மேலும் பல கோடிகளுக்கு அதிபதி ஆகிறார்கள். அந்தச் செல்வம்,  பணம் எங்கிருந்து வந்தது? உன்னைப் போன்றவர்களிடத்திலிருந்து பலவழிகளில் புதிது புதிதாக ஏமாற்றியதால் அவர்களிடத்தில் சேர்ந்ததுள்ளது என்பதை இப்போதாவது உணர்ந்து கொள். மனிதா! பல கோடிகள் பணம் வைத்துள்ளவர்கள் எப்போதாவது சில கோடிகளை உன் போன்ற ஏழைகளுக்கோ, பட்டினியால் வாடுபவர்களுக்கோ கொடுத்துள்ளார்களா? இல்லவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களின் ஆசை, பேராசை மற்றும் எப்போதும் உலக பணக்காரர்களில் முதலாவதாக வரவேண்டும் என்பதின் சுயநலம் தான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.    

அறிவுள்ள மனிதா! அளவுக்கு மிஞ்சி வைத்திருப்பவர்களிடம் மேலும் அவர்களிடம் ஏமாறுவதை நிறுத்திக் கொள். பணம் உள்ளவர்கள் உனக்கு உதவ முன் வந்தால் அவர்கள் உனக்கு உதவி செய்வதற்காக அல்ல. உன்னிடம் இருக்கும் கொஞ்சனஞ்ச பணத்தையும் அபகரிக்கத் தான் என்பது தெரிந்து கொள். அந்த சமயத்தில் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயல்பாடு. இல்லையேல் உனக்கு தூசி அளவு தந்துவிட்டு அவர்கள் இருகைகள் அளவு எடுத்துக்கொள்வதோடு உன்னைப்  படாதபாடு படுத்திக்கொண்டிருப்பார்கள்.



இரக்கமுள்ள மனிதா! அவர்கள் எல்லா சட்டதிட்டங்களையும், மனித தர்மங்களையும் மீறி எந்த செயல்களையும் துணிந்து செய்யும் பலம் கொண்டவர்கள். பணம் கொண்ட அவர்களின் காலடியில் நீதி, நியாயம், நேர்மை, அரசியல்வாதிகள், படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரும் மண்டியிட்டு கிடப்பதால் அவர்கள் மென்மேலும் பல தவறுகள் செய்து கோடிச் செல்வத்தில் மிதக்கிறார்கள். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


     

பொறுப்புள்ள மனிதா! ஒன்பது ராசிக்கல், நவ தானியம், நவரசம், நவகிரகம் (கோள்கள்), நவ் ரங்க் (ஒன்பது வர்ணம்) என்பது இருப்பது உனக்கு நன்றாகவே தெரியும். அதில் நவகிரகம் (வீடு) ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் உள்ளது என்று உன்னிடம் சொல்லி நம்பவைத்து பலர் பணம் பறிப்பதை உன்மூலம் தெரிய வருகிறது. அதோடு நிற்காமல் நவகிரகங்கள் என்னவென்றே தெரியாமல், அது எங்கே, எப்படி இருக்கின்றது என்று அறியாமல், அது இந்த இடத்தில் இருந்தால் இந்த பலன், அந்த இடத்தில் இருந்தால் அந்த பலன் என்று கூறியும் வருகிறார்கள். மேலும் அதன்படி தான் உனது விதி நடக்கிறது என்று சொல்லி சிலரை நம்பவைத்து வருகிறார்கள். அதேபோல் நவரசம் என்றும் அதாவது மனிதரில் ஒன்பது பாவனைகள் இருக்கிறது என்கிறார்கள். எல்லா ஒன்பதுகளுக்கும் என்ன ஒற்றுமை என்று உனக்கு தெரிவதற்கு நியாமில்லை. இப்போது தெரிந்து கொள்.

பேரன்பு கொண்ட மனிதா! பல வருடங்களுக்கு முன்பே வான சாஸ்திர வல்லுனர்கள் ஒன்பது கிரகங்கள் பூமியைச் சுற்றி வருகின்றது என்றும் ஆனால் அறிவியல் வல்லுனர்கள் சூரியனைச் சுற்றித் தான் மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றது என்று நிரூபித்துள்ளார்கள். பின் ஏன் இந்த அடிப்படை முரண்பாடு? உண்மை தெரிந்த பிறகும் பூமியை மையமானத்தை வைத்து கணித்ததை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள். அப்படியென்றால் என்ன உண்மை சொல்ல வருகிறார்கள். அதன் விளக்கம் இதோ!

பாசமுள்ள மனிதா! மனிதன் தான் பூமி. அவனைச் சுற்றும் கிரகங்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன் , புதன், செவ்வாய், ராகு, கேது, சனி மற்றும் குரு. உண்மையில் பூமி என்பது பூமியில் வாழும் மனிதனைப் பற்றி கூறுகிறார்கள். அவனைச் சுற்றி ஒன்பது விதமான மனிதனைத் தான் சங்கேத அடையாளத்திற்காக ஒன்பது கிரகங்கள் என்று  கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டிலோ அல்லது சுற்றியோ இருக்கலாம். அந்த ஒன்பது வகையான மனிதர்கள் இதோ. மகிழ்ச்சியான மனிதர்கள், வேடிக்கையான மனிதர்கள், கருணையுள்ள மனிதர்கள், கோபமிக்க மனிதர்கள், வீரமிக்க மனிதர்கள், பயமுறுத்தும் மனிதர்கள், பொறாமை மனிதர்கள், அற்புதமான (விந்தையான) மனிதர்கள் மற்றும் அமைதியான மனிதர்கள் தான் ஒன்பது கிரக மனிதர்கள். 



இனிய குணம் கொண்ட மனிதா! இப்போது உங்களுக்கு எப்படிப்பட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரிகிறதல்லவா? அல்லது எந்த மனிதனை அணுகினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிகின்றதல்லவா! இன்னமும் தெளிவாக விளக்குகிறேன். உனது நல்வாழ்விற்கு உன்னிடத்தில் மற்றும் உன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி, வேடிக்கை, கருணை, வீரம், அற்புதம் மற்றும் அமைதியான மனிதர்களின் இடத்தைத் தேடி பிடித்துக் கொள். ஒருவேளை உன்னைச் சுற்றி கோபம், பயமுறுத்தும் மற்றும் பொறாமை மனிதர்கள் இருந்தால் உடனே உனது இடத்தை மாற்றிக்கொள். அல்லது அவர்களை உனக்கேற்றவாறு மாற்றி விடு. அவர்கள் உனது அழிவுக்காக உள்ளவர்கள். அமைதி, அற்புதம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய மனிதர்கள் உனது நல்வாழ்வுக்கு உதவுபவை. கருணை, வீரம், வேடிக்கை போன்றவைகள் உனது வாழ்வைக் காக்க தேவைபடுபவை. 

அன்பு மனிதா! உனக்கு கஷ்டம், சுகம் மனிதர்களால் மட்டுமே வரக்கூடியவை. கிரகங்களால் அல்ல. அழிவு மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் உடனே வேறு வீட்டிற்கு செல் என்பார்கள். நல்ல மனிதர்கள் இருந்தால் உங்களுக்கு நல்லகாலம் என்பார்கள். விளையாட்டாக தொல்லை கொடுக்கும் மனிதர்களைப் பார்த்து 'வந்துட்டான்யா ஏழரை' என்பார்கள். அதாவது சனி குணமுள்ள மனிதன் இதற்குப் பொருள். சிலரைப் பார்த்து 'குரு ' என்பார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்கையில் உதவுபவர்கள். சிலரைப் பார்த்துக் 'காமடியன்' என்றும், 'அறிவாளி 'என்றும், 'பலசாலி 'என்றும், 'கருணாமூர்த்தி' என்றும் கூற கேள்விபட்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் தான் பூமி. உங்களை சுற்றும் ஒன்பது வகையான மனிதர்களை அடையாளம் காணுங்கள். உங்கள் வாழ்வு சிறக்க இப்போதிலிருந்தே உங்களச் சுற்றி இருக்கும் மனிதர்களின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள். 


     


உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும். 

           

                                   

1 comment:

  1. மிகச் சிறந்த தத்துவம்.

    ReplyDelete