Pages

Monday 12 November 2012

பாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம் (SWAMI VIVEKANANDA)



 விவேகானந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் - 
பாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்  



சுவாமி விவேகனந்தரின் இளைஞர்களைப் பற்றிய கனவை மெய்யாக்குவது தான் நமது பிரதான கடமை. இன்றைய இளைஞர்கள்  தங்களுடைய வருங்கால நல்வாழ்விற்கு கடினமாக உழைத்தே தீரவேண்டும். உடலில் சோர்வும் ,மனதில் பயமும் அறவே இருத்தல் கூடாது.  தன்னைப் பற்றிய விழிப்புணர்வும் , தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே கூடாது.  அவர்கள் நன்றாக அறிவு பெறவும், ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கு ஆன்மிகம் கண்டிப்பாக துணை செய்யும் என்பதை நம்பவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பலத்தைக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் அவலங்களை களைத்தெறிய பாடுபட வேண்டும்.



பொதுவாக இன்றைய இளைஞர்களின் ஆற்றலும், அறிவும் ஆடல், பாடல், சினிமா, டி . வி. , கணினி, இன்டர்நெட், மொபைல் என்பதில் அதிகநேரம் வீணாக்குகிறார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதில் மூலம் தான் இந்த மனித சமுதாயம் சிறப்பு பெறும். இப்போதும் இளைஞர்கள் விழிப்பு பெறாவிட்டால் இந்த  சமுதாயம் வருங்காலத்தில் பல துயரங்களில்  சிக்கித் தவிக்கும் ஆபத்து வரலாம். இதற்கு முன்னெச்சரிக்கையாக போர்க்கால அடிப்படையில் சிந்தனை சீர்த்திருத்தம் மேற்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக மற்றொரு விவேகனந்தர் அவதரிப்பார் என்பதை கருத்தில் கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் எல்லோரும் அவரின் பிள்ளைகள்! அவர்களுக்கு வழிகாட்டியாக அறிவால் உயர்ந்த அறிஞர்கள், தலைவர்கள் , அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் திகழவேண்டும் என்பதே ஒட்டு மொத்த விருப்பம். இன்றைய இளைஞர்கள் சுவாமி விவேகனந்தரின் கனவுகளை நனவாக்கும் சிந்தனைச் சிற்பிகள். இன்றே சபதம் கொள்வோம். இளைஞர்களை மாய வலையிலிருந்து (இன்டர்நெட்) மீட்போம். இப்போதே அணி திரள்வோம். நமது எண்ணமும், செயலும் இளைஞர்களை நல்வழிப் படுத்துவோம். இதோ புறப்பட்டோம். லட்சியம் கை கூடும் வரை ஓயாது உழைப்போம்.



இளைஞர்களை தயார் படுத்துவதில் நிறைய பொறுமையோடு , பொறுப்பும் இருக்கவேண்டும். அவர்களுடைய மனம் கண்ணாடி போன்றது. கடினமான சொற்களைக் (கற்களைக்) கொண்டு வீசினால் அவர்களின் மனம் உடைந்துவிடும். முதலில் அவர்களுக்கு மனவலிமை கொடுக்கவேண்டும். வெறும் புத்தகப் புழுவாக அல்லது கேளிக்கைகளின் ஈடுபடுத்தி விடாமல் 'சமசீர் இளைஞன்' ஆக உருவாக்க வேண்டும். அதாவது அன்றாடம் படிக்கும் கல்வியறிவோடு ஆரோக்கியம், மனவலிமை, தியானம், யோகா , உடல்பயிற்சி, மனப்பயிற்சி போன்றவை சிறிய பள்ளி வகுப்பில் முதற்கொண்டே பழக்கப் படுத்தவேண்டும். அவ்வாறு உருவாகும் மாணவ மாணவியர் சமுதாயம் அரசியலில், தொழிலில், தொண்டுகளில் சிறப்புடன் பணியாற்றுவார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.    


      

விவேகனந்தரின் இந்த 150 வது பிறந்தநாளில் இளைஞர் சமுதாயம் சிறந்த லட்சியக் கனவோடு விளங்கவேண்டும் என்பது எனது எண்ணம். எவ்வளவோ அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்கள் இருந்தபோதிலும் சுவாமி விவேகனந்தர் அவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டதன் காரணம் அவருக்கு இளைஞர்களின் மீதிருந்த அளவிலா நம்பிக்கை. அவர் ஒரு விதையாக மட்டும் இருந்திராமல் தன்னை பூமியில் புதைத்து அதன்மூலம்  தன்னைப் பல விதைகளை உருவாக்க வேண்டுமென்ற தணியாத தாகம் கொண்டிருந்தவர். அதற்காக தன்னையே புதைந்து கொண்டவர். ஆனால் பலன் தருமுன்னே அவரது ஆயுள் முடிந்தது நமது  துரதிர்ஷ்டம் தான். விட்டுப்போன அவரது பணிகளை தொடரவே இளைஞர் சமுதாயம் முன்வரவேண்டும். அவர்  கடைபிடித்த ஆன்மீக பலத்தின் மூலம் நாட்டில் நடக்கும் அவலங்களை, அநியாங்களை, அக்கிரமங்களை , லஞ்சம், ஊழல் போன்றவைகளை   அடியோடு அழித்து மனித சமுதாயத்தில் எழுச்சி மிகு  விழிப்புணர்வை தூண்டி சாதாரண இளைஞர்களை அவரது சொல், செயலாற்றலின் மூலம் அவர்களை வீர இளைஞர்களாக மாற்றி சிந்தனையில் ஏற்றமும் , நெஞ்சத்தில் உரமேற்றி, தூய்மையான நற்ச்செயல்களை துணிச்சலுடன் செய்து  காட்டும் மனப்பான்மையை உருவாக்குவதற்கு நாம் சபதம் மேற்கொள்ள வேண்டும்.  



ஆயிரமாயிரம் விதைகள் விதைத்தாலும் அதில் எதையும் தாங்கும் வலிமைமிக்க விதைகள் தான் வளர்ந்து, காய்த்து , கனிந்து , பூத்து குலுங்கி நல்ல பலன்களை கொடுக்கும் அழகிய மரமாக உருவெடுக்கும். அதைப்போல எத்தனை கோடி மனிதர்கள் இருந்தாலும் அல்லது வாழ்ந்து மறைந்து இருந்தாலும் அதில் வெகுசிலர் தான் அனைத்து சோதனைகளையும் கடந்து பிரச்சனைகளை மனவலிமையோடு எதிர்கொண்டு தங்களுடைய அறிவும் ஆற்றலளினால் நல்ல மனித சமுதாயத்தை உருவாக்கி அதில் சாதனைகள் பல செய்து வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சுவாமி விவேகனந்தர் ஆன்மீகத்தில் விவேகமுள்ள குருவாகவும், கல்வியறிவில் சிறந்த ஆசானாகவும் இன்றும் அவரது வீர முழக்கம் மனிதர்களிடையே முழங்கிக்கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மனோபலத்தை கொடுத்து அவர்களுக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும் வீறுநடை கொண்டு செல்வோம். வருங்கால இந்தியா நிச்சயமாக எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கும்.



அவரது கனவு மெய்யாக்கும் வண்ணம் இன்றைய முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களை நல்வழிகாட்டும் பணிகளை செய்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. அவரின் பிரம்மச்சரியமும் , அறிவும் ஆற்றலும் இளைஞர்களை அரவணைத்து  கொண்டு செல்லும் செயலும்,  இளைஞர்களின் எண்ணங்களில் 'நம் இந்தியா வருக்கின்ற 2020 ல் வல்லரசு இந்தியா' என்கிற விதையை விதைத்தவர் என்ற பெருமை அவர்க்கு உண்டு.  ஆனால் அன்றே சுவாமி  விவேகனந்தர் இளைஞர்களிடையே இந்திய சுதந்திர விதையை விதைத்தவர் என்று சரித்திரம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. அப்போதே அவர் "எனக்கு பத்து இளைஞர்களை தாருங்கள், அவர்களின் மூலம் சிறந்த இந்தியாவை  உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று வீர சபதம் செய்தவர். ஆகவே நாம் சரித்திரத்தை படிப்பதோடு நின்றுவிடாமல் சரித்திரம் படைக்க முன் வரவேண்டும் . சரித்திரம் படைக்கும் இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் தான் சுவாமிஜி நம்மிடையே மங்காத புகழுடன் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்க முடியும்...




பாகம் : 3 மேலும் தொடரும்...


சுவாமிஜியின் இளைஞர் விழிப்புணர்வு இன்னும் தொடரும்...  


No comments:

Post a Comment