Pages

Friday 30 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 34 என்னை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! LOVE IS ENOUGH

உள்விதி மனிதன்  
சமமனிதக்  கொள்கை  
பாகம்: 34 உள்விதி மனிதனை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! 
அன்பு மட்டுமே போதுமானது!    
LOVE IS ENOUGH!


பாசமுள்ள மனிதா! உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லா சொந்தங்களையும், பந்தங்களையும் துறந்தால் தான் உனக்குப் பிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்கிற எண்ணத்தை இனிமேல் மாற்றிக்கொள். ஏழை, பணக்காரன், இருப்பவன் , இல்லாதவன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று நீ இரக்கமில்லாமல் பாகுபாடு கொண்டு வகுத்து இருப்பதைப் போல 'முக்திக்கு தகுந்தவன், தகுதி இல்லாதவன்' என்பது எனது அதிகாரத்தில் இல்லை. மனித பிறந்த யாராக இருந்தாலும் தன்  கடமை தவறாது நேர்மையாக நடக்கும் எவருக்குமே முக்தி பதவி அளிப்பேன். தூய்மையான அவனது ஜீவ ஓட்டத்தில் கலந்து அதற்கு ஒத்துழைப்பேன். மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பலவிதத்தில் வடிவமைத்தாய். தினமும் பூஜிக்கிறாய். ஆனால் உனது சுயநலத்திற்காக, நீ அனுபவிப்பதற்காக என்னைக் குஷி படுத்துவதாகச் சொல்லி தினமும் என்னை அலங்கரிக்கின்றாய்! தங்கம் மற்றும் வைரத்தால் ஆபரணங்கள் செய்து அணிவிக்கின்றாய். வித விதமான படையல்களைப் படைக்கிறாய். மக்களுக்கு அர்த்தம் தெரியாத மந்திரங்களால் அர்ச்சனை செய்கின்றாய்!



இனிய மனிதா! ஓரிடத்தில் இவைகளெல்லாம் பிரமாண்டமாக செய்கின்றாய். ஆனால் அதேபோல இருக்கும் வேறொரு இடத்தில் என்னை கேட்பாரற்று கிடக்கச் செய்கிறாய். ஏன் இந்த பாகுபாடு? அதனால் எனக்கென்ன லாபம்? என்னை உணர இலவசமாய் கிடைக்கும் அன்பு ஒன்றே போதுமானது. அன்பு ஒன்றே என்னைச் சேர்ந்தது. அன்பு ஒன்றுக்குத் தான் நான் கட்டுப்படுவேன். எனது ஆன்ம ஓட்டத்திற்கு துணையாய் இருப்பது. வேறு எது இருந்தாலும் அது இந்த உள்விதி  மனிதனின் பேரைச்சொல்லி உன்னை ஏமாற்றும் செயல் தான். அந்தப்  பகட்டு வலையில் அகப்பட்டு உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே ! பணம் படைத்தவர்கள் அவைகள் செய்யட்டும். நீ வேடிக்கை பார். அன்பு மனம் கொண்ட உனக்கு அது தேவையில்லை. அன்புக்கு இணை எத்தனை கோடி செல்வங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. அதை எப்போதும் நினைவு கொள்.

பாசமுள்ள மனிதா! உனது தூய்மையான அன்புடன் உறவுகளைப்  புதுப்பித்துக்கொள். உன்னைப் பலவழிகளில் காக்க, உதவி புரியவே அவைகளை உணர்வோடு கலக்கச் செய்திருக்கிறேன். அந்த உணர்வு உள்விதி மனிதன் தான்! எனது ஜீவ ஓட்டம் தான். அதற்காகவே உனக்கு தாய், தந்தை, மனைவி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று பலவாறு சொந்தங்களையும், இரத்த சம்பந்தங்களையும் படைத்ததன் ரகசியம் உனது அன்பை அவர்களிடத்தில் காட்டி அன்பு உணர்வை பெருக்குவதற்காகவே !

சாந்தமுள்ள மனிதா! நீ சந்தோஷமாக இருப்பதற்காக எனது படைப்புகளை அனுபவிக்க என்னென்ன செயல்கள் நான் செய்திருக்கிறேன். அதற்கு பிரதிபலனாக உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். அது தான் சத்தியமான அன்பு ஒன்றே. அதற்காக நீ எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பேன். மனிதா! காலம் காலமாக இந்த உள்விதி  மனிதன் உனக்குள் இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டிப்படைக்கிறேன். அந்த நாடகத்தில் என்னைப் பற்றி எதை எதையோ அவர்கள் இஷ்டப்படி சிலர் கதை கட்டி உண்மையை மறைத்து தங்களுக்குச் சாதகமானவற்றைப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உலகத்தைப் படைத்த எனக்கு ஏதாவது தேவைப்படுமா என்பதை நினைத்துப் பார்! அதை உனக்கு தெளிவு படுத்தவே நான் இப்போது வந்துள்ளேன்.

பேராற்றல் கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனை எல்லோரும் புகழந்து பேசவேண்டும், பாடவேண்டும், ஆடவேண்டும் என்பது மட்டும் அல்ல. அவ்வாறு செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைவிட நான் விரும்புவது உனது செயல்கள் ஒவ்வொன்றும் இந்த உலகில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியூட்டி செழுமையுடன் வாழவைக்க வேண்டுமென்பதே எனது ஆசை. வீண் பேச்சுகளை பேசிக்கொண்டிருக்காமல்  நல்ல எண்ணகளுடன் ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய். அதைத் தான் இந்த உள்விதி மனிதன் உன்னிடத்தில் காலம் காலமாக எதிர்ப்பார்க்கிறான்.

என்னை நம்பும் மனிதா! உன்னுள் இருக்கும் ஆன்ம ஓட்டத்தில் எப்போதும் நல்ல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும். உன்னைச் சார்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அன்புடன் நேசி. உலக மக்களை நேசித்தாலே என்னை நேசிப்பதற்குச் சமமாகும். மனிதா! நான் உனக்குள் எப்படியிருக்கிறேன் என்று உனக்கு ஓரளவு தெரிந்திருக்கும். என்னை கண்களுக்குத் தெரியாத காற்றாக நினைத்தாலும் சரி, உள்ளுக்குள் பரவியிருக்கும் உணர்வாக மதித்தாலும் சரி அல்லது ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகளாக நினைத்தாலும் சரி அல்லது மிகமிகக் குறைந்த உயிர்மின்னோட்டத்தால் இயங்கும் இயந்திர மனிதனாக நினைத்தாலும் சரி அவைகளெல்லாம் உன்னையன்றி வேறு யாராலும் காட்ட முடியாது.

சக்தியுள்ள மனிதா! நான் உனக்குள் உன் கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் உன் அனுமதி பெற்று உனக்குள் ஜீவ வித்தாக (விதையாக) உனக்கு ஆன்ம ஓட்டம் கொடுத்து உன் உடலின் பாரம் தெரியாமல் உன்னைச் சுமந்தும் ,  நான் உன்னைத் தாங்கி கொண்டிருப்பதை இப்போது உணர்கிறாயா! இந்த உள்விதி மனிதனைக் காற்றாக நீ நினைத்துக் கொண்டால், அந்தக் காற்றைக் கொண்டு  உன் உடல் பாரம் உனக்குத் தெரியாதவாறு உன் பெரிய உடல் எடையை எவ்வாறு தாங்குகின்றேன்? என்று எண்ணிப் பார்த்தாயா? அந்த நன்றி உன்னிடத்தில் இருக்கின்றதா! அப்படியென்றால் என் பராக்கிரமத்தை, ஆற்றலை உணர்கிறாயா! ஒரு பேச்சுக்காக உன் எடையளவில் பாதி பாரத்தை ஒரு நாளோ அல்லது ஒரு மணிநேரம் சுமந்து பாரேன். நீ எவ்வளவு நிமிடம்? எவ்வளவு மணிநேரம்? சுமக்கிறாய் என்று பார்ப்போம்.



திறமை கொண்ட மனிதா! உன்னைக் காக்க இந்த உள்விதி மனிதன் உன்னைச் சுற்றி இரத்த ஓட்டமாக, மன ஓட்டமாக, ஆன்ம ஓட்டமாக வலம் வருவதோடு மட்டுமில்லாமல் நீ இடும் கட்டளைகளைப் பணிந்து ஒரு அடிமைபோலல்லவா செய்து வருகிறேன். மனிதா! எனது இந்தச்  செயலால் என்னை நீ அடிமை என்று நினைத்து, அலட்சியப்படுத்தி தீய காரியங்களைச் செய்ய நினைத்தால் உனக்குள் இருக்கும் என் மூச்சு காற்று 'சூறாவளியாக' மாறி உன்னைச் சின்னா பின்னமாக்கி அழித்துவிடுவேன். ஆனால் அதுவே அனைவருக்கும் நன்மைதரும் நல்ல செயலாக இருந்தால் இந்தக் காற்று உனக்குத் தென்றலாய், குளிர்ச்சியாய், இனிமையாய் எப்போதும் இருக்கும்.



அன்பு மனிதா! இந்த உலகில் உள்ள படைப்புகள், பொக்கிஷங்கள், உயிரினங்கள், மரம், செடி, கொடி  மற்றும் பல அற்புதங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றாயே  அவைகளெல்லாம் எனது ஒரு கைபிடி அளவே ஆகும். இன்னும் ஏராளமான அதிசயங்கள் கொடுக்கப்போகிறேன் உனது வாயிலாக! உன்னை காக்கும் விதமாக எப்போது எது தேவையோ அவைகளை உன்னைக்கொண்டே தந்து கொண்டிருக்கிறேன்.

பிரிய மனிதா! இப்போது நீ உபயோகிக்கும் மூளையின் அளவு ஒரு குண்டூசி முனையளவு மட்டுமே! இன்னும் அதிகம் அதிகம் உபயோகிக்க வேண்டிய நேரம் வரும்போது இந்த உள்விதி மனிதனின் அளவில்லா ஆற்றல் தெரியவரும். மனிதா! சரித்திரத்தை புரட்டிப் பார்! நீ இருக்கும் நாட்டில் இதற்கு முன் எப்படி இருந்தது தெரியுமா? எப்போதும் சண்டை , சச்சரவுகள் தான் இருந்தது. மக்களுக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை, தினம், தினம் செத்து பிழைக்கும் ஜீவனம். அதற்குக் காரணம் சுயநலம், பேராசை. இப்போது சண்டை சச்சரவுகள் வெகுவாக இல்லாமல் ஓரளவிற்கு குறைந்து விட்டது. அதற்கு காரணம் இந்த உள்விதி மனிதன் உனக்குள் இருந்துகொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்து நல்ல செயல்கள் செய்து வருவதால் தான். ஆனால் தனிப்பட்டவர்களின் சுயநலத்திற்காக உன்னைப் போன்றோர் என்ன செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டு வருகிறார்கள்.

பெருமை கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனின் அடுத்த இலக்கு, பேராசை மற்றும் சுயநலக்காரர்களை அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்து, நன்மை தரும் செயல்களைச் செய்ய வைத்து உன்னைப் போன்றோர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி வாழ்க்கை வாழவைப்பதற்கு உதவி செய்யவே உன் முன் நிற்கிறேன். இனிமேல் போர்கள், கலவரங்களை மேலும் குறைக்க அனைத்து உயிரினங்களில் நான் இருப்பதை தெரியப்படுத்தியும், எனது மகிழ்ச்சி தரும் நோக்கத்தை உணர்த்தி உலகத்திற்கு வரப்போகும் பேரழிவிலிருந்து காப்பதற்கு உறுதிகொண்டுள்ளேன். இதைப்  பறைசாற்றுவதின் மூலம் உலகத்தில் மூலைமுடுக்கில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன். பறை சாற்றவும் ஆரம்பித்துவிட்டேன். உனக்குக் கேட்கின்றதா?



இரக்கமுள்ள மனிதா! இனிமேல் என்னைப் பற்றிய ரகசியங்களை உன்னின் மூலமாகச் சாதரணமாக மனிதனுக்கும் தெரியப்படுத்தி, அவனுள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றியச் சிந்தனைகளை வளர்த்து நான் படைத்த இந்த உலகில் அவனுக்குச் சேரவேண்டிய பங்குகளை வாங்கிக்கொடுத்து என்றும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி நல்வாழ்வு தரப்போகிறேன். வெகுவிரைவில் இந்த உள்விதி மனிதனின் சக்தி எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. எனது கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது.

மேன்மை தங்கிய மனிதா! இதுவரை மனிதனை நல்வழிப் படுத்தும் வழிகளையும், அதன் கலைகளையும் தான் சொல்லிவந்துள்ளேன். ஆனால் உனக்கு உன்னை மற்றவர்களிடமிருந்து காத்துக்கொள்ளும் கலையை கற்றுத்தரப் போகிறேன். மனிதா! நீ மட்டும் தர்மவானாக இருந்தால் போதாது. மற்றவர்களும் தர்மவானாக இருந்தால் உலகில் எப்போதும் யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒருவேளை நீ அதர்மவானை எதிர்கொண்டால் உனது தர்மசிந்தனை அவனிடத்தில் செல்லுபடியாகாது. ஆகவே அவனுக்குத் தர்ம பாடம் புகட்டவே உனக்கு என் அனைத்து சக்திகளையும் கொடுத்து எதையும் சந்திக்கும் பராக்கிரமசாலியாக மாற்றி அனைவரையும் காக்கும் வீரனாக்கப்  போகிறேன். இனிமேல் எல்லோர் வாழ்விலும் வளர்பிறை தான்.



பண்புள்ள மனிதா! ஒரு காலத்தில் மனிதனை மனிதன் தீண்டத் தகாதவனாக இருந்தபோது நான் மட்டும் அனைவரிடத்தில் சமமாக எனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்தை உனக்குத் தடையீல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனே அது எதற்காக..?? மனிதா! நான் சுத்தத்தை விரும்புகிறவன் தான். புற சுத்தத்தை விட அக சுத்தம்  தான் எனக்கு பிரியம். நீ செய்ய நினைக்கும் தீய செயல்களை அழித்து நான் தேடும், நான் விரும்பும் நல்ல மனோபாவத்துடன் உன் வாழ்வு அமைய வேண்டும் என்பதே எனது தீராத ஆசை. மனிதா ! என்னைக் கண்டு நீ பயம் கொள்ளத் தேவையில்லை. எனக்கு பொருள் வேண்டாம். உனது அன்பு ஒன்றே உன்னிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அனைவர்களிடத்தில் எதிர்ப்பார்ப்பது அதுவே!



இனிமேலும் பணம் கொடுத்து ஏமாறாதே!
அன்பு மட்டும் கொடுத்து உள்விதி மனிதனைக்  
கை கொள் !      

Tuesday 27 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுப்பவன் INNER MAN GIVES HOLY LIFE

உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 



பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள்விதி மனிதன் 


INNER MAN GIVES HOLY LIFE


என் பிரியமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை பார்பதற்கு அல்லது இருப்பதை உணர்வதற்கு ஆகாரம் இல்லாமல், உறக்கமில்லாமல் ஆண்டுக்கணக்கில் உடலை மறந்து, உலகத்தை மறந்து ஏன் தன்னையே மறந்து யாரும் தொந்தரவு கொடுக்காதவாறு காட்டிலோ, மலையிலோ தவத்தை மேற்கொண்டால் தான் நான் கிடைப்பேன் என்று அரிய பெரிய ஞானிகள், மகான்கள், முனிகள் சொல்லியிருப்பதை ஏட்டிலும், புத்தகத்தில் வாயிலாகவும், உனது  முன்னோர்கள் சொன்னதின் மூலமாகத் தெரிந்து கொண்டிருப்பாய். அவைகள் உண்மையா? அப்படியென்றால் இன்று எத்தனைபேர் அப்படி இருக்கின்றார்கள்? என்கிற சந்தேகம் உனக்கு வரலாம். அந்த சந்தேகத்தை இந்த உள்விதி மனிதன் தீர்த்துவைக்க விரும்புகிறேன்.

என் இனிய மனிதா! அவைகள் உண்மை தான்! ஆனால் அவைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களுக்குத் தான்  பொருந்தும். ஆனால் காலத்தின் வேகம், மனித அறிவின் ஆற்றல், அறிவியல் முன்னேற்றம், மனப்பக்குவம், எதையும் அறிந்துகொள்ளும் ஆவல், அறிந்ததை உடனே உலகுக்கு அறிவிக்கும் தகவல் பரிமாற்றத்தின் அபரிதமான வளர்ச்சி போன்றவைகள் வளர வளர என்னை தெரிந்து கொள்ளும் காலத்தின் அளவு மிகவும் சுருங்கிவிட்டன. இந்த பரப்பரப்பான உலகில் என்னை அறிய சிறிது நேரமே போதும். என்ன ...?? இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கின்றதா! நீ நினைத்தால் உடனே செய்ய முடியும். அதுவும் நீ இருக்கும் இந்த இடத்தில் இருந்து கொண்டு! 



பெருமை மிக்க மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பற்றிய விழிப்புணர்வு இது நாள் வரை மறைவாக, இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று, இப்போது முதல் இந்த உள்விதி மனிதனைப் பற்றிய உண்மைகள் நீ கட்டாயம் தெரிந்து கொண்டேத் தீர வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு தெளிவாக பொறுமையாக விவரித்துக் கொண்டிருக்கின்றேன். நீ தெரிந்து கொண்டால் தான் நான் படைத்த இந்த அதிசய, அற்புத உலகத்தை அழிவிலிருந்து காக்க முடியும். பல மகான்களின் கனவுகளும் பூர்த்தி அடையும். இனிமேல் நீ என்னை நன்றாகப் புரிந்து கொள்வாய். புரிந்துகொள்ளும்வரை உன்னை விடவும் மாட்டேன். அதற்குரிய மனப்பக்குவம், உடல் பக்குவம், ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவும் உனக்கு வந்துவிட்டது. என்னை அறிய மும்முரமாக முழு மனதுடன் கூடிய சிறிய முயற்சியும், பழகுவதற்குச் சிறிது பயிற்சியும் இருந்தால் போதுமானது. 



பாசமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை அறிந்தால் என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்பது புரிகின்றது. அதாவது நீயும், உனது முன்னோர்களும் தேடித்தேடி கிடைக்காத நிரந்தர மகிழ்ச்சியை உன்னைத் தேடி வந்து எப்போதும் உன்னிடத்தில் குடிகொண்டிருக்கும்படி செய்யப் போகிறேன். என்னை அறிந்த பிறகு உனக்கு வரப்போகும் நம்பிக்கை இந்த உலகத்தையே சொர்கமாக மாற்றும் ஆற்றல் கிடைத்துவிடும். எனக்காக நீ நான் சொல்கிறபடி நடக்க வேண்டாம். உனக்காக உனது நன்மைக்காக இந்த உள்விதி மனிதனுடன் வா. அதற்குண்டான வழியை உனக்கு காட்டுகிறேன்.



பெருமை கொண்ட மனிதா! சம்சாரத்திலிருந்து விலகி, பந்தபாசத்தைத்  துறந்து தான் முக்தி நிலை அடையமுடியுமென்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றில் உண்மையில்லை என்று தான் நான் சொல்லுவேன். சம்சார பந்தம் என்பது என்னால் மனித குலத்திற்கு அளித்திருக்கும் விதி. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டிய புண்ணிய காரியமாகும். நான் உனக்குள் இருந்துகொண்டு உன்னைக் 'காத்தல்' வேலையை செய்துகொண்டு வருகிறேன். இந்த உலகில் பெருகிவரும் ஜனத்தொகையில் என்னால் ஒரே நேரத்தில் அனைவரையும் தனித்தனியாக காத்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே தான் நல்ல சிந்தனை உனக்களித்து, சம்சார பந்தங்களை ஏற்படுத்தி, குடும்ப பந்தத்தை உருவாக்கி ஒருவருக்கொருவர் காத்துக்கொள்ளும்படி செய்து இருக்கிறேன். அந்த பந்தத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குள் இரத்த உறவுகளை, நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் காக்கும் அக்கறை உள்ளவர்களாக ஒரு உணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.



பண்புமிக்க மனிதா! அந்த உறவுகளெல்லாம் நான் கொடுத்திருக்கும் அனுபவத்தையும், செல்வத்தையும், இன்பத்தையும் கொடுத்து அவர்களைச் சந்தோஷத்தில் மிதப்பதற்கு உதவியாக இருக்கவே நான் உன்னுடன் இருக்கிறேன். அதை விட்டுவிட்டு என் பெயரைச் சொல்லி என்னை உணர்வதற்குச் சம்சாரப்பந்தத்தை துறந்து தான் உணரவேண்டும் என்று எண்ணுவது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்துகொள்.

நல்ல எண்ணமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை உணர அனைத்தையும் மறக்கவேண்டும். பிறகு உனது கடமையைச் செய்யாமல் எனது கடமையைச் செய்யவேண்டும் என்பது சரியே இல்லை. உன்னிடத்தில் எண்ணற்ற எண்ணங்களும், செயல்களுக்கான அறிவுகள் இருக்கும்போது அவைகளையெல்லாம் யாராலும் ஒருகாலும் மறக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆக்க மற்றும் அழிப்பது எல்லாம்  உன் கையில் தான் இருக்கின்றது. என்னை உணர்வதற்கு சராசரியானச் செயலே போதும். நூல்கள் பலவற்றை கரைத்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.



உண்மையான மனிதா! இந்த உள்விதி மனிதனைச் சில நிமிடங்கள் நினைத்தாலே போதுமானது. ஏனென்றால் எனக்கு இருக்கும் அனுபவத்தில் நீ ஒரு கோடு போட்டால் நான் ரோடே போட்டுவிடுவேன். நீ ஆரம்பித்து வைத்தால் உன்னை தூண்டிகொண்டும், ஊக்கப்படுத்தியும் தினமும் ஞாபகபடுத்தி அந்தச் செயலை முடிக்கும்படி செய்துவிடுவேன். நீயும் கூட கேள்விபட்டிருப்பாய். ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலே அந்த செயல் பாதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் அந்த செயல் நன்மை தரும் செயலாக இருக்கவேண்டும்.

இரக்கமுள்ள மனிதா! முக்தி அடைவதற்கு சம்சாரிகளுக்குத் தடை ஏதுமில்லை. அப்படி சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டால் அவர்களின் குடும்பத்தை யார் கவனிப்பது? அவருடைய கடமைகளை யார் செய்வது? நீ தான் செய்யவேண்டும். உனது  குடும்பத்திற்கு உனது ஆயுள் முழுவதும் நீ தான் வழிகாட்டியாக நீயல்லாமல் வேறு யார் தான் இருப்பார்கள். உனது சுய நலத்திற்காக பேராசைப்பட்டு எனக்கு சேவை செய்வதற்கு உனது குடும்பத்தை பிரிந்து வந்தால் உன் எண்ணம் மற்றும் செயல் முற்றுப் பெறாது. மனிதா! செல்வங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்கிற நினைவு உனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்காக குறுக்கு வழியில் செல்வதற்கும் துணிந்து விடுகின்றாய்! இந்த உள்விதி மனிதனை நீ உணரவேண்டுமானால் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய், தங்கம், வைரம், வைடூரியம் போன்ற காணிக்கைகள் தேவையில்லை. உனது அன்பு கலந்த தூய்மையான எண்ணங்களும், நன்மை தரும் செயல்களுமே என்னை ஆட்கொள்ளும் வழி.

நல்ல சிந்தனை கொண்ட மனிதா! இந்த உலகத்தில் போலி மற்றும் வறட்டுக் கௌரவத்திற்காக என்னை ஆட்கொள்வதற்கு பலவழிகளில் செலவு செய்து பலரிடத்தில் சிபாரிசு பெற்று பல ஆயிரம் ரூபாய்களை கொட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அவைகள் வெறும் வெத்து வேட்டு. அதைப் பெற்றுக்கொண்டு  சிலர் பரவசம் ஏற்படும்படி உணர்வுகளைத் தூண்டி ஆசியும் அருளும் வழங்குகிறார்கள். அந்த போலியான நடிப்பை உண்மையென்று நம்பி அவர்களிடத்தில்  நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை காணிக்கையாக செலுத்துகிறாயே, இது உனக்கே நல்லதாகத் தெரிகின்றதா!  உன்னுடைய கஷ்டத்தை இந்த உள்விதி மனிதன் மனதில் வைத்துக்கொண்டு உனது வயிற்றுப் பசியை போக்க என்னாலான உதவியாக சொற்பமான பணத்தையும் நல்ல ஆரோக்கியமான உடலும் தருகிறேன். அதையும் நீ போலி ஆசாமிகளிடம் கொடுத்து ஏமாறுகிறாயே? அந்தச் செயலை இக்கணமோடு நிறுத்திக்கொள். அது உனக்கு மேலும் மேலும் துயரத்தைக் கொடுக்கும். நிம்மதியை இழக்கச் செய்யும். 



சத்திய மனிதா! சிலர் பரவசமாகப் பேசுவார்கள், காட்சி அளிப்பார்கள்! அந்தப் பரவசமெல்லாம் அந்த கணம் மட்டுமே உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த இடத்திலிருந்து உனது சொந்த இடத்திற்கு வந்தால் மீண்டும் நீ உனது பழைய நிலையை அடைந்து புலம்ப ஆரம்பித்துவிடுகிறாய். அதனால் அதில் உனக்கு லாபம் இருப்பதாக உணருகின்றாயா!  அந்தப் பரவசம் ஒருவித மயக்கமே! மனிதா! என்னை வைரத்தால், தங்கத்தால் அபிஷேகம் செய்தால் அது எனக்குள் ஒட்டுமா! ஒட்டாது அல்லவா! அப்படியென்றால் அவைகள் யாருக்குப் போய்ச் சேருகின்றது? அப்படிச் சேராத இடத்தில் சேருகின்றதால் கெடுதலே உண்டாகும். அதற்கு நீ உடந்தையாக இருப்பதை நான் தடுத்து நிறுத்தி உன்னை இலவசமாக நல்ல எண்ணங்களின் மூலம் பிறப்பில்லா பெருவாழ்வு கொடுத்து முக்தியை பெற்று தருவதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அதற்கான ஆரம்பமே இது தான். நீ என்றும் நல்லவன். நீ சம்சார கடமை செய். அதன் மூலம் நான் உனக்கு முக்தி தருகிறேன்.




முக்தியை  இலவசமாக அடையக்கூடிய வழி உன்னிடத்தில்...


உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...


'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை

'தெய்வப்பெண்' மறந்த பாரதி  
புதுக்கவிதை 





காணுமுன்னே தோன்றி 

கண்ணெதிரே மறைந்தவள் 

பாரதி படைத்தான் 
புதுமை பெண் 
இவன் படைப்பதோ 
தெய்வப் பெண் 



ஈடில்லா அன்பு 
அளவில்லா பொறுமை 
அசராத உறுதி 
பார்ப்பதில் குளுமை 
பழகுவதில் இனிமை 
தோற்றத்தில் எளிமை 
அவளே தெய்வப் பெண் 

வார்த்தையின் கணம் 
படிக்கும் போதும் 
நட்பின் கணம் 
பிரியும் போதும் 
உறவின் கணம் 
இழக்கும் போதும் உணரும்.

வாழ்க்கை ஒரு புதிர் 
நிறைந்த பயணம் 
இறந்த காலம் தெரிந்த விடை 
எதிர்காலமோ தெரியாத விடை 
நிகழ காலம் புரியாத விடை.



அன்புக்கு உதாரணம் 
தாய்.
பேரன்புக்கு 
தெய்வப் பெண்.

புதுமைப் பெண்ணாய் 
இருக்கும்போது 
ஓரெழுத்து கூட எழுதாதவன் 
ஒரு வரி கூட படிக்காதவன் 
எதையும் சிந்திக்காமல் 
இருந்தவன்.



தெய்வப் பெண்ணாய் 
மாறிய பிறகு 
வண்டி வண்டியாக எழுத வைத்தவள் 
பலவற்றை படிக்க வைத்தவள் 
புதிது புதிதாக சிந்திக்க வைத்தவள் 
எல்லாம் 
எனக்குள் அவள் விதைத்த விதைகள்.



வாழ்க்கைக்கு புது இலக்கணம் 
கற்றுக் கொடுப்பவள் 
புதுமைப் பெண்ணுக்கு 
புது விதி தந்தவள்.



அவள் இருக்கும்போது 
எழுத நேரமில்லாதவன் 
படிக்க நேரமில்லாதவன் 
சிந்திப்பதற்கு நேரமில்லாதவன் 
அவள்  நினைவு 
என் பேனாவில் நுழையும் போது 
ஆஹா...அற்புத படைப்புகள் 
எழுதியது நானா?
இல்லை அந்த தெய்வப் பெண்ணா?



அணுஅணுவாக ரசிப்பவள் 
அக்கறையோடு செதுக்குபவள் 
அளவில்லா இன்பத்தை தருபவள் 
ஆரோக்கிய வாழ்வு கொடுப்பவள் 
அன்பை கொட்டி தீர்ப்பவள் 
அவளஅல்லவோ தெய்வப் பெண்.




அவளில்லாமல் என்னை நினைக்காதவன் 
அவள் இருக்கும்போது சுகமாய் உணர்ந்தவள் 
நொடிபொழுது கூட கவலை தராதவள் 
கவலைப்படத் தெரியாமல் காப்பவள் 
எப்போதும் புத்துணர்வு தருபவள் 
மாறாத புன்சிரிப்பை உதிர்ப்பவள் 
அவள் பெயர் தெய்வப் பெண்ணோ?



நல்லதை கற்கச் சொல்பவள் 
நன்மை தரும் செயலை செய்பவள் 
அழக் கற்றுக்கொடுக்காதவள் 
அன்பே வடிவமாய் ஆனவள் 
அவளே தெய்வப் பெண் 



வாழ்க்கைக்கு வலிமை கொடுப்பவள் 
செயலில் தன்னம்பிக்கை தருபவள் 
சிந்தையில் புதுமை உருவாக்குபவள் 
எதையும் செய்யும் துணிச்சல் தருபவள் 
வெற்றிகளை குவிக்கும் ஆசி கொடுப்பவள் 
தெய்வப் பெண்ணே 
நீ என்றும் வாழ்கவே பல்லாண்டு.



நீ கண்ட கனவு 
நிச்சயம் மெய்படும்.
புதுமை பெண்ணுக்கு இணையாய் 
அனைவருக்கும் துணையாய் 
வாழ்கையில் நம்பிக்கை 
தருவாள் 
இந்த தெய்வப்பெண்!




பாரதி படைக்க மறந்த படைப்புகள் 



இன்னும் தொடரும்...

Monday 26 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN

உள்விதி மனிதன்  


சமமனிதக் கொள்கை  

பாகம்: 32 உனது உடலில் அறுபட்டத் தோலை ஒட்ட வைக்கும் உள் மனிதன்-
INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN



அன்புள்ளம் கொண்ட மனிதா! உனக்குள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் உள்விதி மனிதன் உனது வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சிகளைக் கொடுக்க வந்திருக்கிறேன். நீ என்னை விருந்தாளியாக எண்ணிவிடாதே! உனது உள்ளக்கோவிலில் இருக்கும் அணையாத கோடி பிரகாசம் வெளிச்சம் கொண்ட 'சேவகன்' என்பதை சொல்லிக் கொள்வதில்  பெருமைபடுகிறேன். எனது அனுபவங்களை கடல்போல் வற்றாமல் உனக்குள் வைத்திருக்கிறேன். அந்த அனுபவக்கடல் நிஜக்கடலைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. அதாவது நிஜக்கடலில் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் கடலின் ஆழத்தில் இருக்கும். சாதாரணமான உள்ளவைகள் மேல்பகுதியில் இருக்கும்.


பிரிய மனிதா! எனது இந்த அனுபவக்கடலில் விலைமதிப்பில்லாத நன்மை தரும் செயல்கள் அவைகள் எளிதில் கிடைக்கும் வண்ணம் தனியாக மேலேயும், தீய மற்றும் அழிவு செயல்கள் அதலபாதாளத்தில் உனக்குத் தெரியாதவாறு புதைத்து வைத்திருக்கிறேன். எப்படியென்றால் நாலுபேருக்கு நன்மை செய்ய நினைத்தால் அதை பகிரங்கமாக உடனே செய்வதற்குத் துணிவு தந்துள்ளேன். அதனால் உனக்கு தீங்கு எதுவும் வராது. ஆனால் தீய செயல்கள் உன்னால் எளிதாகவோ, அனைவருக்கும் தெரியும்படியோ சட்டென்று செய்யவிடாமல் மிகவும் யோசித்து பயத்துடன் ஒருவித படபடப்புடன் நிதானமாக அதைச் செய்யலாமா? வேண்டாமா? என்று நானே முடிந்தவரை தடை போட பார்ப்பேன். என்ன செய்வது! அதையும் மீறி சிலர் தீய செயல்கள் செய்யும்போது எனது ஓட்டம் பாதிப்படைகின்றது. அது உனக்கு கெடுதல் விளைவிக்கும் என்று எண்ணியே உன்னறிவுக்கு எளிதில் எட்டாதவாறு மறைத்து வைத்திருக்கிறேன். 


மதிப்புமிக்க மனிதா! எனது கோடிக்கணக்கான வருட அனுபவங்களை மறைத்து வைக்கமுடியாது. ஆனால் உனக்கு எது நல்லது என்பதை முதலில் அடுக்கி வைக்க முடியும். ஆகவே உனக்கு நல்லவைகள் மேலேயும், கெட்டவைகள் கீழேயும் கஷ்டப்பட்டு அடுக்கி வைத்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! மனிதருள் சிலர் கெட்ட எண்ணங்கள் கொண்டு இங்குள்ள பலரை நாடு, சாதி, மொழி, இனம் மற்றும் உறவுகளின் பெயரால் தங்களின் சுயநலத்திற்காகவும், பதவி ஆசையினாலும், பேராசை காரணமாகவும் தவறான வழியில் அழைத்துச்சென்று அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் சொல்வதோ, உங்களுக்கு நல்வழி காட்டுகிறேன் என்றும், உங்களுக்கு எப்போதும் நிம்மதி சந்தோஷம் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே செயலில் இம்மியளவு கூட காட்டாமல் அவர்களைப் பசி பட்டினிக்கு ஆளாக்கி, அடிமைகளாக நடத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அபகரித்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து தன்  சுயநலத்திற்க்காக சக்கையாக பிழிந்து வேலை வாங்கி, தாங்கள் சொல்கிறபடி ஆடுகின்ற கைப்பொம்மையாக மாற்றி நல்லவன் போல வேஷம் போடும்  வேடதாரிகளை நம்பாதே! அவர்களின் துணைக்குப் போகாதே! அது உன்னையும், உனது பரம்பரையும் அழித்துவிடும்.


மதிப்புமிக்க மனிதா! அவர்கள் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள உனது உணர்வை தூண்டுவதற்காக வேண்டுமென்றே சாதி , மதம், இனம் பற்றி அவதூறாக பேசுவார்கள். அதனால் உடனே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து தீய செயலை செய்ய துணிந்துவிடுகின்றாய். அப்படிப்பட்டவர்களை மதியாதே! உனக்குத் தொல்லை கொடுத்து நிரந்தரமாகக் கஷ்டத்தில் மாட்டவைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். மனிதா! சாதி, மதம், இனம் அனைத்தும் சமுதாயத்தில் ஒழுக்கத்திற்காக உள்ளவை. அவற்றிற்கு கலங்கம் வராமல் காப்பதே நமது கடமையும் கூட. அவற்றில் உனது ஆற்றலை வீணாக்காதே!

பெருமைமிக்க மனிதா! நமது மதம், இனம் என்று சொன்னால் மட்டும் உன்னுடைய பசி நீங்காது. அவற்றை கட்டிக்காத்து உழைத்தால் தான் நீ நினைப்பதை அடைய முடியும். அதற்குப் பரந்தமனப்பன்மையும், விசாலமான குணமும் தேவை. அதற்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள். அதன் மூலம் அனைவருக்கும் நன்மை செய்யப் பார்.

அன்பு மனிதா! உனக்கு ஒரு காயமோ அல்லது கத்தி அறுபட்டாலோ எனது அன்பை துடிப்பை வெளியே காட்டும்விதமாக வலியையும், அதை உனக்கு தெரிவிக்கும் வண்ணமாக வலியைக் கொடுத்து அல்லது இரத்தத்தை வெளியே வரும்படி செய்து உனது கவனத்தை காயம் அல்லது அடிபட்ட இடத்தை உணர்த்துகிறேன். நான் அப்படி உணர்த்தாமல் இருந்து விட்டால் உனது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை தெரிந்து கொள். அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்தாலும், நானே தோல்களை ஒட்ட வைத்து காயத்தை ஆற்ற வைக்கிறேன்.   


இரக்கமுள்ள மனிதா! இதிலிருந்து தெரிந்துகொள் ! இந்த உள்விதி  மனிதன் எவ்வளவு அன்பானவன், எவ்வளவு இரக்கமானவன் என்று! இந்தச் செயலை நீ எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் யாராலும் செய்ய இயலாது. ஆனால் உனக்கு இலவசமாகச் செய்கிறேன். டாக்டர்கள் ஒருவேளை சீக்கிரம் ஆறவைப்பதற்குக் கிரியா ஊக்கியாக செயல்படலாம். ஆனால் ஒட்டவைக்க என்னால் மட்டுமே முடியும். இதன் மூலம் நான் எவ்வளவு அனுபவசாலி என்பதை புரிந்துகொண்டாயா! 


உள்விதி மனிதனின் மன ஓட்டம் இன்னும் வரும்...
மகிழ்சிகள் தொடரும்...